மாறாத வடுக்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா

முகப்பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை போக்கிக்கொள்ள என்ன செய்யலாம்?

ஆண் , பெண் இரு பாலருக்கும் குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றும். இவ்வாறு தோன்றும் பருக்களை ஒரு சிலர் கைகளை கொண்டும் நகங்களை கொண்டும் காயப்படுத்துவதனால் அந்த இடத்தில் வடுக்கள் ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு ஏற்படும் வடுக்கள் முகத்தின் அழகை பாதிப்பதாக இருக்கும். அவ்வாறே இதனை தினமும் கண்ணாடியில் பார்த்து மனவேதனை படுவதுடன் மனோவியல் ரீதியில் பாதிப்படையாவும் செய்யும்.

இவ்வாறு முகத்தின் அழகினை கெடுத்திடும் வகையில் தோன்றும் கரும் புள்ளிகள், வடுக்கள் போன்றவற்றை வீட்டில் உள்ள உபயோகப் பிருட்களை கொண்டே எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதற்கு சில ஆலோசனைகள் இதோ,

  • தேயிலை செடி எண்ணெய் (TEA TREE OIL). 

தேயிலை செடி மற்றும் இலைகள் என்பன சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும் என அறியப்படுகின்றது. தேயிலை செடி மூலம் தயாரிக்கப்படும் எண்ணெயானது ANTI BACTERIAL பண்புகளை ஏராளமான அளவில் கொண்டுள்ளது. இதனை சரும பிரச்சனைகளைப் போக்க பயன்படுத்தினால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, சருமமும் அழகாக காட்சியளிக்கும். உங்கள் முகத்தில் பருக்கள் விட்டுச் சென்ற கருமையான தழும்புகள் உள்ளதா? அப்படியானால் சிறிது தேயிலை செடி எண்ணையை பஞ்சு உருண்டைகளில் நனைத்து சருமத்தின் மீது தடவுங்கள். இதனால் பருக்கள் நீங்குவதோடு, பருக்களால் வந்த கருமையான தழும்புகளும் மறையும்.

  • பேக்கிங் சோடா (BAKING SODA).

பேக்கிங் சோடா ஒரு சுத்தமாக்கும் கிளென்சிங் (CLEANSING) பொருள். இது பருக்கள் மற்றும் பருத் தழும்புகளை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவற்றை எளிதில் எதிர்த்துப் போராடும். தழும்பு மற்றும் கரும்புள்ளி பிரச்சினைகளில் இருந்து விடுபடவேண்டும் என்றால், பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, கருமையான பருத் தழும்புகளின் மீது தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், விரைவில் பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகள் மறையும். 

  • உப்பு (SALT)

வீட்டில் உபயோகிக்கும் சமையல் உப்பானது பருக்களால் வந்த தழும்புகளை எளிதில் எதிர்த்துப் போராடும். அதுவும் உங்கள் பருக்கள் உடைந்து, அதிலிருந்த சீழ் மற்ற இடங்களில் பட்டால், பருக்கள் பரவ ஆரம்பிக்கும். இந்நிலையில் உப்பைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது பருக்களை பரவ விடாமல் தடுக்கும். அதற்கு உப்பை நீரில் கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரால் அப்பகுதியைத் தேய்த்து கழுவுங்கள்.

  • பூண்டு (GARLIC).

நம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பூண்டு, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. குறிப்பாக இது பருக்கள் மற்றும் பருக்கள் விட்டுச் சென்ற அசிங்கமான தழும்புகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் எளிதில் உடையும் வகையில் இருந்தால், பூண்டு பயன்படுத்துங்கள். அதற்கு சிறிது பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி 2-3 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் பருக்கள் மட்டுமின்றி, தழும்புகளும் நீங்கும். 

  • ஆப்பிள் சீடர் வினிகர் (APPLE SEEDER). 

ஆப்பிள் சீடர் வினிகரும் சருமத்தில் மாயங்களை உண்டாக்கும். அதிலும் உங்களுக்கு பருக்கள் மற்றும் பருத் தழும்புகள் அதிகம் இருந்தால், ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு முகத்தை அன்றாடம் சுத்தம் செய்யுங்கள். இதனால் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கி, தழும்புகள் இருந்தாலும் மறைந்துவிடும். 

  • முட்டை வெள்ளைக்கரு (EGG WHITE). 

முட்டையின் வெள்ளைக்கரு சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும் அற்புதமான பொருளாகும். ஒருவர் முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, தழும்புகளும் மறைந்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பிரகாசமாகவும், பளிச்சென்றும் காணப்படும். அதிலும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, மாஸ்க் போட சிறப்பான பலன் கிடைக்கும்.

  • க்ரீன் டீ (GREEN TEA). 

க்ரீன் டீயில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட தேவையான சத்துக்களாகும். அதற்கு க்ரீன் டீயை போட்ட பின், அதன் இலைகள் அல்லது க்ரீன் டீ பையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளை செய்து வந்தால், பருக்கள் மட்டுமின்றி தழும்புகளும் மறையும். 

  • க்ளே மாஸ்க் (CLAY MASK)

க்ளே சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், க்ளே மாஸ்க் போடுவதே சிறந்தது. இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் வறட்சியின்றி, பொலிவோடு இருக்கும். அதிலும் உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்தால், க்ளே மாஸ்க் பயன்படுத்துங்கள். 

  • வேப்பிலை (NEEM).

வேப்பிலை மிகவும் சிறப்பான மூலிகைப் பொருள். இது சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தைத் தாக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் இதர தொற்றுகளில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும். அதற்கு வேப்பிலையையோ, அதன் எண்ணெயையோ அல்லது அதன் பொடியையோ கொண்டு சருமத்தை பராமரிக்கலாம். முகப்பரு அதிகம் இருந்தால், நற்பதமான வேப்பிலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

Article By TamilFeed Media, Canada
1828 Visits

Share this article with your friends.

More Suggestions | Health