மருதாணி அழகிற்கு மட்டுமல்ல மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.

இரவில் சரியாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள், மருதாணிப் பூக்களை படுக்கைக்கு அருகில் வைத்தோ அல்லது தலையணையில் வைத்தோ தூங்கினால் நன்றாக தூங்கலாம்.
  • மழைக்காலங்களில் அல்லது தண்ணீரில் அதிக நேரம் நிற்பதனால் காலில் ஏற்படும் சேற்றுப் புண்ணை சரி செய்ய வேண்டும் என்றால், மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து இரவில் பற்று போட்டு, காலையில் கழுவி விடுங்கள். இப்படி 3 நாட்கள் செய்து வந்தால் புண் உடனே ஆறிவிடும்.
  • சிலர் உள்ளங்காலில் ஏற்பட்ட ஆணியை போக்க பல வழிகளை தேடி அவதிபட்டிருக்கலாம். ஆனால், மருதாணியை வைத்து சுலபமாக ஒரே வாரத்தில் குணமாக்கலாம். மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து ஒரு வாரம் கட்டி வந்தால் ஆணியை குணமாக்கலாம்.
  • ஒற்றைத் தலை வலியை நீக்க மருதாணி இலையை அரைத்து வலி உள்ள பக்கத்தில் பற்றுப்போட்டு வந்தால் இந்த வலி தீரும். மருதாணி வேரை நசுக்கிப் பிழிந்து சில துளி சாற்றினை காதில் விட காது வலி சரியாகும். மருதாணி இலையை அரைத்து நீரில் கலந்து இந்த நீரினால் சிறிய காயம், அடிபட்ட சிராய்ப்பு இவற்றை கழுவி வந்தால் காயம் விரைவில் குணமாகும்.
  • பெண்கள் தினமும் புடவையை இறுக்கமாக கட்டி கட்டி, இடுப்புப் பகுதியில் கருப்பாக தழும்பு போன்று ஏற்பட்டிருக்கும். அதனை சரி செய்ய மருதாணி, மஞ்சள், அருகம்புல் இவை மூன்றையும் சேர்த்து அரைத்து பூசி வர வேண்டும். இப்படி செய்தால் இடுப்பில் இருக்கும் கருப்பு தழும்பு கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
  • முடி உதிர்வு என்பது பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சனையாகும். இதனை சரி செய்ய வேண்டும் என்றால், மருதாணிப் பூவை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அதை வெயிலில் காய வைத்து தொடர்ந்து தலையில் தேய்க்க வேண்டும்.
  • மருதாணி இலை - 10 கிராம், மஞ்சள் - 5 கிராம், மிளகு - 6, பூண்டு - 1, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, அதன் பின் பால் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். (குறிப்பு: இந்த மருந்தை சாப்பிடும் போது புளி, புகைபிடித்தல், அதிக காரம் போன்றவற்றை நீக்க வேண்டும்)
  • மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வர உடலில் வெப்பம் தணியும். சிலருக்கு அடிக்கடி மருதாணி வைத்து வந்தால் சளி பிடிக்கும். இவர்கள் மருதாணி இலையுடன் 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைக்கலாம். மருதாணி வைத்து வந்தால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.
Article By TamilFeed Media, Canada
3950 Visits

Share this article with your friends.

More Suggestions | Health